திருவள்ளூர், செப். 01 –
மத்திய அரசு தமிழகத்திற்கான கல்வி நிதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தை தொடங்கிய அவர் உடல்நலக்குறைவு காரணமாக (30.08.2025) இரவு திருவள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையின் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சசிகாந்த் செந்தில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு இதுவரை ஒதுக்கவில்லை என்பதையே காரணமாகக் காட்டி அவர் தன்னிச்சையாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருந்தார்.
ஆனால், இந்தப் போராட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்காதது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையாக மாறியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சசிகாந்த் போராட்டம் கட்சியின் ஆலோசனை இல்லாமல் நடத்தப்பட்டது. உடனடியாக அதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், ராகுல் காந்தியின் வாக்குத்திருட்டு போராட்டத்தின் கவனத்தை மாற்றும் விதமாக இந்தப் போராட்டம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால், சசிகாந்த் செந்திலும் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் இடையே இணக்கம் இல்லாத சூழல் நிலவுகிறது என்ற தகவல் பரவியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்படுவார் என்ற வதந்தி கிளம்பியபோது அடுத்த மாநிலத் தலைவராக சசிகாந்த் வரக்கூடும் என்ற பேச்சு பரவியது. இதுவே அவர்களுக்குள் மனக்கசப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
சசிகாந்த் ராகுல் காந்தியுடன் நேரடி தொடர்பு கொண்டிருப்பதாலும் கட்சியின் மேலிடத்துக்கு நெருக்கமாக இருப்பதாலும் தமிழகத்தில் உள்ள நிர்வாகிகளுடன் சரியாக இணக்கமாக இல்லையென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மாநிலத் தலைவர் பதவியை குறிவைத்தே இப்போராட்டத்தை தொடங்கியிருக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.



