உசிலம்பட்டி, ஜூன் 16 –
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை அடிவாரப் பகுதி, வாலாந்தூர் கண்மாய் பகுதிகளில் இரை தேடி வரும் மான்கள் அடிக்கடி சாலையைக் கடப்பது வாடிக்கையாக உள்ளது. இதன்படி, அதிகாலை நேரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகில் சாலையைக் கடக்க முயன்ற 2 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது.
சாலையோரம் புள்ளிமான் இறந்து கிடந்ததைக் கண்ட அவ்வழியாக சென்றவர்கள் உசிலம்பட்டி நகர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் உசிலம்பட்டி வனச்சரக வன அலுவலர்கள் உயிரிழந்த புள்ளிமானை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அடிக்கடி சாலையைக் கடக்கும் மான்கள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் சூழலில் ஆங்காங்கே விழிப்புணர்வு பதாகைகளை வைத்து வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.