சிவகங்கை, ஆக. 13 –
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலின் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க ஊழியர்கள் பேசும் போது: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் அதிக பணிச்சுமை ஏற்படுவதால் வருவாய்த்துறை அலுவலர்களான நாங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் வேலை செய்கிறோம் என்று பேசினார்கள்.
இதைத் தொடர்ந்து அவர்கள் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் பேசினார்கள். அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைத்து வாரத்திற்கு இரண்டு முகாம்கள் மட்டுமே நடத்திடவும் இதற்கு உரிய கால அவகாசம், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.
பேரிடர் மேலாண்மை பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களையும் மீண்டும் வழங்க வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிகள் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகளை நிறைவேற்ற புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்பட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



