ஈரோடு, ஜூலை 14 –
ஈரோடு மாவட்டம் பெருந்துறை, ஈங்கூர், இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: உலக நுகர்வோர் உரிமைகள் தினம் என்பது நுகர்வோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கியமான நாளாகும். எந்தவொரு பொருளையும் வாங்கும் முன் அதன் தரம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, தயாரிப்பு நிறுவனத்தின் விவரங்கள் உள்ளிட்டவற்றை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். பொருட்களை வாங்கும்போது ரசீது பெற்றுக் கொள்வதையும், உத்தரவாத அட்டைகளை பாதுகாப்பாக பொதுமக்கள் வைத்திருக்க வேண்டும்.
சேவைக் குறைபாடு அல்லது பொருள் குறைபாடு ஏற்பட்டால் நுகர்வோர் நீதிமன்றங்கள் மற்றும் துறைவாரியான குறைதீர்ப்பு அமைப்புகள் மூலம் உரிய நிவாரணம் பெற முடியும் என்பதையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை தங்களது குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டும். கல்வி நிறுவனங்களில் நுகர்வோர் உரிமைகள் தொடர்பான விவாதங்கள், கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். விழிப்புணர்வுள்ள நுகர்வோராக ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கருத்துக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி. கட்டுரைப்போட்டி. ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிய அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். முன்னதாக, முதன்மை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் ஆட்சித்தலைவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை அலுவலர்களிடம் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, பெருந்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வட்ட செயல்முறைக் கிடங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறித்து, விவசாயிகளுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தேன்மொழி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மகேஸ்வரி. வட்டாட்சியர் (பறக்கும்படை-குடிமைப்பொருள்) முத்து கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் (மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம்) பாலசுப்பிரமணியம் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.



