திங்கள்சந்தை, ஜூன் 23 –
இரணியல் மேல தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ஜெகன் கோபால் (50). அமெரிக்காவில் ஐடி ஊழியர் ஆக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவியும் அமெரிக்காவில் வேலை பார்த்து வருவதால் மனைவி மகளுடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகன் கோபாலுக்கு நடக்க முடியாத அளவில் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மட்டும் சிகிச்சைக்காக சொந்த ஊரான இரணியலுக்கு வந்து விட்டார். அவரது தந்தை காலமாகிவிட்டதால் தாயாருடன் இருந்து இங்கு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது தாயார் பெங்களூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். தனிமையில் இருந்த ஜெகன் கோபாலுக்கு நடக்க சிரமம் ஏற்பட்டதால் உறவினர்களை செல்போனில் அழைத்து உணவு வாங்கி வரக் கூறியும் அவ்வப்போது கார் வரவழைத்து மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஜெகன் கோபால் வீடு கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதை கவனித்த அருகில் உள்ள கடைக்காரர் அவரது உறவினருக்கு நேற்று தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து கதவைத் தட்டி அழைத்த போது அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜெகன் கோபால் ஒரு செயர் அருகில் தரையில் இறந்து அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்த தடம் இருந்தது. இது குறித்து உறவினர்கள் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெகன் கோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெகன் கோபால் திடீர் உடல்நலக் குறைவால் இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஐடி ஊழியர் மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.