சென்னை, ஜூன் 19 –
இந்திய தேசிய அப்போஸ்தல பேராயத்தின் சென்னை திருமண்டல குருத்துவ ஆயர்களின் மாநாடு பேராயர் டாக்டர் பால் ஆர்.டி மாறன் தலைமையிலும் மாமன்ற தலைவர் பேராயர் தேவ பிரின்ஸ் மாறன் அவர்கள் வழிகாட்டுதலின் பேரிலும் சென்னை கீழ்ப்பாக்கம் ஹார்லிஸ் ரோடு டி.இ.எல்.சி அருள்நாதர் ஆலயம் பிஷப் மாணிக்கம் மஹாலில் நடைபெற்றது. இதில் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகளாக பேராயர்கள் என்.பி.டேனியல் (திருவள்ளூர்), செயலாளராக ஜான் வில்லியம் (வடசென்னை), மரியதாஸ் (செங்கல்பட்டு), ஜெயக்குமார் (சென்னை கிழக்கு),
கிங் மோகன்ராஜ் (சென்னை மேற்கு ), ஆண்ட்ரூ (தென் சென்னை) மற்றும் இணைப்பாயர்கள் லிவிங் ஸ்டோன், பால் ரவிக்குமார், எம்.எஸ்.ஸ்டான்லி ஆகியோர் முன்னிலை வகிக்க இந்த மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு: அனைத்து திருச்சபைகளுக்கும் அங்கீகாரம் வழங்கி கிறித்துவ திருச்சபைகளை பாதுகாத்திட வேண்டும். குறிப்பாக சொந்த இடங்களில் உள்ளவர்களுக்குக் கட்டிடம் கட்ட ஒப்புதல் வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும். அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கான பொதுவான கல்லறைத் தோட்டங்கள் அமைத்திட அரசு உடனடியாக இடங்களை ஒதுக்கித் தர வேண்டும். மின்வாரியம் மூலமாகக் கொடுக்கப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்திற்கான 2 சி சலுகையை தடையின்றி கொடுக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். கிறித்துவ உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பண பலன்களை சற்று அதிகரித்தும், பென்ஷன் தொகையை ரூ.3000 ஆக வழங்கிடவும், 60 வயதை கடந்தவர்களுக்கு உடனடியாக பென்ஷன் பெறுவதற்கு அரசு வாரியத்தின் விதிகளைத் திருத்தி அமைக்க வேண்டும் முதலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இம்மாநாட்டில் கிறித்துவ படிப்பிற்கான பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது. இதில் ஏராளாமான ஆண்கள், பெண்கள் அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.