மார்த்தாண்டம், அக். 6 –
அருமனை அருகே சிதறால் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (41). கொத்தனார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு தாய், இரண்டு சகோதரிகள் உள்ளனர். சகோதரிகளுக்கு திருமணம் ஆகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். சுனில் குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுனில் குமார் தனக்கு சொந்தமான 16 சென்ட் நிலத்தை விற்று விட்டு வீட்டிலிருந்து வெளியேறி மாயமானதாக கூறப்படுகிறது. இதனால் தாய் தனது மகள் வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார். சுனில் குமார் திரும்ப வீட்டிற்கு வரவில்லை.
இதற்கு இடையே பூட்டப்பட்டிருந்த அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. உடனடி அக்கம்பக்கத்தினர் இது குறித்து அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை திறந்து உள்ளே பார்த்தனர். அப்போது கட்டில் அடியில் சுனில்குமார் அழுய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
6 மாதங்களுக்கு முன்பு மாயமான சுனில் குமார் எப்போது வீட்டுக்கு வந்தார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? போதையில் தவறி கீழே விழுந்து இறந்தாரா? நோய்வாய்ப்பட்டு இறந்தாரா? என்ற விவரம் பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



