அருமனை, ஜூன் 19 –
அருமனை அருகே உள்ள மாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பினிலா (32). இவருக்கு ஒரு மகனும் 3 ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பினிலா கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் ஒரு அண்ணனின் பராமரிப்பில் வசித்து வருகிறார். பினிலா அருகில் உள்ள ஒரு முந்திரி தொழிற்சாலை வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பினிலா வீட்டிற்கு வந்து தங்குவது அண்ணன் மனைவி நிஷாவுக்கு பிடிக்கவில்லை. அவர்களை துரத்துவதற்காக அவ்வப்போது பினிலாவுடன் தகராறு செய்வதும், குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்குவதும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் சம்பவ தினம் பினிலா மகளை நிஷா கொடூரமாகத் தாக்கி தூக்கி வீசி உள்ளார். இதனை பினிலா பார்த்து மிகவும் வேதனை அடைந்தார். அத்துடன் படுகாயம் அடைந்த குழந்தையை குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். மேலும் அவர் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கு இடையே சிறுமியை கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நிஷாவை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி தக்கலை சிறையில் அடைத்தனர்.