கோவை, ஆக. 25:
36 மாணவ, மாணவிகளை கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்ல ஏற்பாடு
கோவை மாவட்டம் ஏ.ஜி. புதூர் பகுதியில் ‘ஓடை வனம்’ என்ற அமைப்பின் மூலம் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் தங்களது விடுமுறை நாட்களில் கிராமத்தை தூய்மையாக வைத்திருக்கும் பணிகளிலும், மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் தொடர் முயற்சியால் அப்பகுதி பசுமை நிறைந்த பகுதியாக மாறி வருகிறது.
ஏ.ஜி. புதூர் மற்றும் குரும்பபாளையம் பகுதிகளுக்கு அருகில் கோவை பீளமேடு விமான நிலையம் அமைந்துள்ளதால், அப்பகுதி வழியாக விமானங்கள் பறந்து செல்லும்போதும், தரையிறங்கும்போதும் மாணவர்கள் ஆர்வத்துடன் அவற்றை பார்த்து வந்துள்ளனர். தாங்களும் ஒருநாள் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற கனவை நண்பர்களிடம் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த கோவை பட்டணம் பகுதியில் ‘கார்ஸ் 327’ நிறுவனத்தை நடத்தி வரும் இளைஞர் விஷ்ணு வேணுகோபால், மாணவர்களின் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, அரசு பள்ளிகளைச் சேர்ந்த 36 மாணவ, மாணவிகளை வருகிற 26-ம் தேதி கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள முக்கிய இடங்களை சுற்றிப் பார்க்கச் செய்து, அதே நாளில் மாலை மீண்டும் விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானப் பயணம் மற்றும் சுற்றுலாவுக்கான அனைத்து செலவுகளையும் ‘கார்ஸ் 327’ நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்களது வாழ்நாளில் எப்போது விமானத்தில் பயணம் செய்வோம் என்ற கனவை நனவாக்கிய ‘கார்ஸ் 327’ நிறுவனத்தின் நிறுவனர் விஷ்ணு வேணுகோபாலுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், ஏ.ஜி. புதூர் மற்றும் குரும்பபாளையம் பகுதி பொதுமக்களும் அவரது சமூகப் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
36 பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விமான டிக்கெட் வழங்கும் நிகழ்ச்சி ஏ.ஜி. புதூர் ‘ஓடை வனம்’ பகுதியில் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பைச் சேர்ந்த பசுமை ஏ.க. புதூர் தங்கவேல், மரம் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் விமான டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டனர்.
இந்த ஏற்பாடுகளை ‘கார்ஸ் 327’ நிறுவனத்தின் சார்பில் விஷ்ணு வேணுகோபால் மற்றும் மோகன் வேணுகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.



