போகலூர், ஆக. 23 –
அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவ மையம் கடந்த ஒரு வருடமாக ராமேஸ்வரத்தின் முனைக்காடு கிராமத்தில் இன்டெகிரெடெட் மல்டி- டிரோபிக் அக்வாகல்சர் (MTA) திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மூலம் கடற்கரைப் பெண்கள் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்க உதவுகிறது. இந்தத் திட்டத்தை மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவகுமார் திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் கடல் சூழலியல் நிபுணர் டாக்டர் அவிக்டோர் ஆபெல்சன் மற்றும் அம்ருதா குழுவினரும் பங்கேற்றனர்.
இந்தக் கட்டத்தின் ஒரு பகுதியாக 20 பெண்களும் அவர்களின் குடும்பங்களும் மீன் கூண்டுகள், கடல்பாசி தளங்கள், மீன், சிப்பி மற்றும் சங்கு கீரை விதைகள் பெற்றனர். மேலும் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து வந்த 110 பெண்களுக்கு கடலில் பாதுகாப்பாகச் செயல்பட உயிர்காப்பு உடைகள், தொப்பிகள், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக கடல்பாசியிலிருந்து தயாரிக்கப்படும் உப்புசாறு, சோப்புகள் போன்றவற்றை தயாரிக்கும் பயிற்சிகள் மற்றும் திருப்பாலைக்குடி, சோலியக்குடி, தோண்டி போன்ற கிராமங்களில் கிராசிலேரியா (Gracilaria) வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த முயற்சிகள் அனைத்தும் ப்ளூ இஸ் தி நியூ பிங்க் என்ற திட்டத்தின் கீழ் அம்ருதா பல்கலைக்கழகத்தின் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவ மையம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.



