கன்னியாகுமரி, ஜூன் 23 –
குமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்தவர் அருணாச்சல மகன் சுப்பிரமணியம் (46). இவர் தனியாருக்கு சொந்தமான ஸ்பீக்கர் செட் சவுண்ட் சர்வீஸில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஏழு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவரது நண்பர் கோட்டாரைச் சேர்ந்த தற்போது கொட்டாரத்தில் வசித்து வரும் கந்தசாமி மகன் சுந்தர் (40) தச்சுத் தொழிலாளி. இவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இருவரும் நேற்று இரவு வேலை முடிந்து ஒரே இருசக்கர வாகனத்தில் இரவு சுமார் 10 மணியளவில் வீட்டிற்கு செல்ல வேண்டி திருநெல்வேலி கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர். பால்குளம் பைபாஸ் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த வேன் மோதியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்சுகிராமம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.