ஸ்ரீரங்கம், ஜூலை 22 –
108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமானதும், பன்னெடுங்காலமாக தத்தம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடு பகுதியாக இருப்பது அம்மா மண்டபம் படித்துறை ஆகும். இந்தப் படித்துறையில் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரக்கூடிய அமாவாசையில் திருச்சி மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு இங்கு வந்து தர்ப்பணம் கொடுத்து செல்வர்.
திதி மற்றும் ஆன்மீக நிகழ்வுகளை செய்து கொடுப்பதற்காக அம்மா மண்டபம் படித்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் தலைமுறை தலைமுறையாக அமர்ந்து பொதுமக்களின் முன்னோர்களுக்கு திதி மற்றும் சாங்கியங்கள் என பல்வேறு வழிபாடுகளை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று அறநிலையத்துறை அதிகாரிகள் அம்மா மண்டபம் முழுவதும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடம், இந்த இடத்தில் புரோகிதர்கள் ஆக்கிரமிப்பு செய்து திதி மற்றும் பல்வேறு சடங்குகளுக்கு பயன்படுத்துவது சட்டப்படி தவறு எனக்கூறி அம்மா மண்டபத்தை கையகப்படுத்தும் முயற்சியாக அளவீடு கற்களை கொண்டு வந்து வைத்தனர். மேலும் தலைமுறை தலைமுறையாக அங்கு புரோகிதம் நடத்தி வந்த புரோகிதர்களின் பொருட்களையும் அப்புறப்படுத்தினர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஊழியர்கள்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பணியாற்றும் ஆளும் கட்சியின் பிரமுகர் ஒருவர் ரங்கநாதர் வந்து அமரும் அம்மா மண்டபம் படித்துறை ஆக்கிரமித்து செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து மேற்கண்ட நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் செய்யத் தூண்டியதாக கூறியும், தலைமுறை தலைமுறையாக இங்கு புரோகிதம் பண்ணும் பிராமணர்களை வெளியேற்றுவதை கண்டித்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் புரோகிதர்கள் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
புரோகிதர்களின் இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது, போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் போலீசார் புரோகிதர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். புரோகிதர்கள் உடன்படாத காரணத்தினால் குண்டுகட்டக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். இதனால் சில புரோகிதர்கள் வெகுண்டெழுந்து ஆளும் கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பி தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். ஒரு சில புரோகிதர்கள் அப்பகுதியில் பூ விற்பவர்கள், யாசகம் பெறுவோர்கள், உணவு கடைகள் நடத்துவோர் என அப்பகுதியினரிடம் நாங்கள் இங்கே இல்லை என்றால், உங்களுக்கும் பிழைப்பு இல்லை ஆகையால் வாருங்கள் சேர்ந்து போராடுவோம் என அழைத்து சாலை மறியலில் ஈடுபட வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, ஆடி மாதம் பிறந்துள்ளது. ஆடி பதினெட்டு, ஆடி அமாவாசை என அடுத்தடுத்து சில முக்கிய நிகழ்வுகள் அம்மா மண்டபத்தில் நடைபெற இருக்கும் நிலையில் அப்பகுதியில் உள்ள புரோகிதர்களை ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



