திருப்பூர், ஜூலை 20 –
மின்வாரியத்திலுள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தப்பட்டது. டி.என்.ஈ.பி தொழிலாளர் நல முன்னேற்ற சங்க மாநில தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் சென்னை அரசு தலைமை செயலகத்தில் மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அவர்களை நேரடியாக சந்தித்து மனு அளித்து கோரிக்கை வைத்தார்.
அப்போது அமைச்சர் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநியமனம் நீதிமன்ற வழக்கு ஆவணங்களை முழுமையாக ஆராய்ந்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நல்லாட்சியில் பணிநியமனம் செய்ய ஆவண செய்யப்படும் என தெரிவித்தார்.
அமைச்சரிடம் ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள மனுவில்: மின்வாரியத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வர்தா, கஜா, தானே போன்ற பேரிடர் காலங்களில் உயிரை துச்சமாக மதித்து 2 உழைத்த இவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. தொழிலாளர் நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் இவர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டும் இதுவரை ஆணை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் மின்வாரியத்தில் தற்காலிகப் பணியாளர்கள் யாரும் கிடையாது என்றும், அடுத்த 6 மாதங்களுக்கு தற்காலிகமாக ஆட்கள் எடுக்கப்பட்டு பின்னர் டி.என். பி.எஸ்.சி. மூலம் 15 ஆயிரம் பணியாளர்கள் நிரந்தரமாக நிரப்பப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளதால் ஒப்பந்த தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ள ஒப்பந்த தொழிலாளர்களின் விவரப் பட்டியல்கள் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ளது. நீதிமன்ற உத்தரவு விவரங்கள் அனைத்தும் மின்வாரியத்தில் காணாமல் போய்விட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, நீதிமன்ற உத்தரவின்படி மின்வாரியத்தில் உள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய விரைந்து தீர்வு காண வேண்டுமென டி.என்.ஈ.பி தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.



