தக்கலை, ஏப். 6 –
தக்கலை அருகே பெருஞ்சிலம்பு அருகே பன்னிப்பொத்தையில் உள்ள மலைப்பகுதியில் தொழிலாளர்கள் ரப்பர் மரம் வெட்டும் தொழிலில் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கே கூடு கட்டியிருந்த மலை தேனீக்கள் திடீரென கலைந்து தொழிலாளர்களை கடுமையாக தாக்கியது.
இதில் சில தொழிலாளர்கள் காயத்துடன் தப்பிய நிலையில், அவர்களுக்கு சமையல் செய்து கொடுக்க சென்ற பாமா (52) என்ற பெண்ணை மலைத் தேனீக்கள் பயங்கரமாக கொட்டியதில் மயக்கமடைந்தார். மயங்கிய பெண்மணியை மீட்க தொழிலாளர்கள் முயன்றும் தேனீக்களின் கொடூர தாக்குதலை சமாளிக்க முடியாமல் தவித்தனர்.
இதையடுத்து தக்கலை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் உத்தரவின் பேரில், தீயணைப்புத்துறை மீட்பு குழுவினர் விரைந்து பன்னிபொத்தையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் மலை ஏறி சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பின்னர் நெருப்பு புகை மூட்டி மலைத்தேனிக்களை விரட்டி, மயக்கநிலையில் இருந்த பெண்மணியை மீட்ட தீயணைப்பு வீரர்கள், அப்பெண்ணை சுமந்து அங்கிருந்த கனரக வாகனத்தில் வைத்து கீழே கொண்டுவந்தனர்.
பின்னர் தயார் நிலையில் இருந்த தக்கலை தனியார் ஆம்புலன்ஸில் அப்பெண்ணை ஏற்றி பொதுமக்கள் உதவியுடன் தீணையப்புத்துறை மீட்பு குழுவினர் குமாரபுரம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிட்சையளிக்கப்படுகிறது.



