நாகர்கோவில், ஜூன் 17 –
குமரி மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக ஒளி வீசும் ஒளி விளக்குகள் பொருத்தி வரும் வாகனங்களால் ஒளி மாசு அடைவதுடன் எதிர்வரும் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருவதுடன் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இதனை முற்றிலுமாக தடை செய்யும் விதமாக குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மாவட்டம் முழுவதும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட ஒளிரும் விளக்குகளை தவிர வாகன உரிமையாளராலும் ஓட்டுனராலும் அதிக ஒளிக்காகவும், அழகுக்காகவும் பொருத்தப்பட்டுள்ள அதிக ஒளி வீசும் விளக்குகளை பொருத்தி வரும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அந்த விளக்குகளை அகற்றவும் உத்தரவிட்டிருந்தார்.
அவரின் உத்தரவின் பெயரிலும் கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல்துறை உதவி ஆய்வாளர் சுமித் ஆட்ரின் மற்றும் காவலர்கள் சுசீந்திரம் ஆசிரம பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அளவுக்கு அதிகமாக ஒளி வீசும் ஒளி விளக்குகள் மாட்டிவரப்பட்ட வாகனங்கள் சோதனை செய்து அளவுக்கு அதிகமாக வைக்கப்பட்ட விளக்குகள் அனைத்தும் நீக்கப்பட்டன.
தற்போது உள்ள காலகட்டங்களில் உள்ள வாகனங்கள் அதிகப்படியான ஒளி உமிளும் விளக்குகளை முகப்பு விளக்குகள் பயன்படுத்துவதால் ஒளி மாசுபாடு ஏற்படுகிறது. இதனால் எதிரில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதசாரிகள் போன்றவருக்கு போதுமான அளவு சாலை பார்வை கிடைப்பதில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஜீரோ ஆக்ஸிடெண்ட் எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி போக்குவரத்து காவலர்கள் இத்தகைய வாகன சோதனைகளில் ஈடுபட்டு அளவுக்கு அதிகமான ஒளி உமிழும் ஒளிவிளக்குகளை வாகனங்களில் இருந்து அகற்றியும் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்தும் வருவது குறிப்பிடத்தக்கது.



