நாகர்கோவில், ஜூலை 2 –
குளச்சல் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன் (86). பொதுப்பணித்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் தனது மகனுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் குலதெய்வ வழிபாட்டுக்காக அவர் தனது சகோதரர் மற்றும் உறவினர்களுடன் நேற்று மாலை சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தார். அவர்கள் குளிர்சாதன முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 4.45 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்தடைந்தது. ரயிலில் இருந்து கீழே இறங்கிய அழகப்பன் கழிவறை செல்வதற்காக மீண்டும் ரயிலில் ஏறினார். அதே நேரத்தில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.
இதனால் அவசரமாக அழகப்பன் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். ரயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடையே அழகப்பன் சிக்கிக் கொண்டார். ரயில் இயங்கியபடி இருந்ததால் அவர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அழகப்பருடன் சென்னையிலிருந்து வந்த அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் கண் முன்னே சோக சம்பவம் நடந்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் அழகப்பனின் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


