நாகர்கோவில், ஏப். 11 –
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 23ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருகிற 15ஆம் தேதி வருகிறார். அன்று அவர் குமரி மாவட்டத்தில் நடக்கும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ நிகழ்ச்சி நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள காமராஜர் சிலை சந்திப்பு முதல் வடசேரி எம் ஜி ஆர் சிலை சந்திப்பு வரை நடைபெற உள்ளது. ரோடு ஷோ தொடங்கும் முன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கும் மோடி முடிவில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
சுமார் 50,000 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியினர் தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ நிகழ்ச்சி நடக்கும் சாலையை டிஐஜி சரவணன் ஆய்வு செய்தார். இதற்காக நேற்று இரவு நாகர்கோவில் வந்தவர் வேப்பமூடு முதல் எம்ஜிஆர் சிலை சந்திப்பு வரையிலான சாலை பகுதியை பார்வையிட்டார். அவருடன் குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
தொடர்ந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் வரும் பிரதமர் மோடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிப்பேடு தளத்தில் வந்து இறங்குகிறார். இதனால் அந்தப் பகுதிகளிலும் ஆய்வு நடைபெற்றது.



