நாகர்கோவில், ஜூலை 4 –
நாகர்கோவில் அடுத்த எறும்புக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் மனைவி இவரி ஸ்டெர்லின் (63). இவர் வழக்கம்பாறை பகுதியில் உள்ள தேவாலயம் சென்று பிரார்த்தனை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புவதற்காக வடசேரி செல்லும் பஸ்ஸில் ஏறினார். பஸ் நாகர்கோவில் வேப்ப மூடு சந்திப்பு வந்ததும் அவர் அங்கு இறங்கினார். அப்போ தனது கழுத்தில் கிடந்த 5 பவுன் செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை யாரோ பஸ் கூட்டத்தை பயன்படுத்தி திருடியது தெரிய வந்தது.
இது குறித்து இவரி ஸ்டெர்லின் கோட்டாறு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் டிப்டாப் உடையில் வந்த பெண்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதன் பேரில் சம்பவ பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே டிப் டாப் உடையில் வரும் பெண்கள் ஓடும் பஸ்ஸில் கைவரிசை காட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே களியக்காவிளை, குளச்சல் பகுதிகளில் பஸ்களில் பயணம் செய்த பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் நகை பறிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கும்பல் பஸ் பயணங்களில் திருடி விட்டு உடனடியாக வெளியூர்களுக்கு தப்பி செல்வது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


