கன்னியாகுமரி, ஜன. 6 –
கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி செல்வதற்காக திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய இரு குளு குளு வசதி கொண்ட சொகுசு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தாமிரபரணி என்ற சொகுசு படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் அந்த படகு கடந்த அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் படகுத்துறையில் இருந்து சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கடல் வழியாக கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள படகு கட்டும் தளத்தில் கரை ஏற்றப்பட்டது. பின்னர் அந்த படகு ரூ.40 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடந்து வந்தது.
2 மாத காலத்திற்கு பின் தற்போது படகு சீரமைக்கும் பணி முடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இந்த படகு சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்தில் இருந்து நேற்று கடலில் இறக்கப்பட்டது.
பின்னர் அங்கு இருந்து கடல் வழியாக கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுதுறைக்கு கொண்டுவரப்பட்டது. கடலில் பரிசோதனை அடிப்படையில் வெள்ளோட்டம் விடப்பட்டு பொங்கல் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக வரும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.



