தருமபுரி, ஜூலை 23 –
தருமபுரி நகரில் எஸ்.வி.ரோடு குப்பையன் தெருவில் உதயமரத்தடியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி சொர்ண முத்து மாரியம்மன் திருக்கோவிலின் 37ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து பக்தர்கள் பூ கரகம், தீச்சட்டி, மாவிளக்கு ஆகியவைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இந்த ஊர்வலம் எஸ். வி. ரோடு, வெளிப்பேட்டை தெரு, காந்தி சிலை வழியாக திருக்கோவிலை சென்றடைந்தது. பிறகு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் நகரப் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். திருக்கோவில் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கும்ப பூஜை நடைபெற்றது.



