தஞ்சாவூர், ஜூலை 12 –
தஞ்சாவூர் மாவட்ட அளவில் ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் மேக்ஸ்வெல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. குத்துவிளக்கேற்றி ரெட் கிராஸ் நிறுவனர் ஹென்றி டுனாண்ட் படத்தை திறந்து வைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாதவன் தலைமை தாங்கி தொடங்கினார். முன்னதாக ஜூனியர் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ஜேசுதாஸ் தமிழ் மாறன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி தாளாளர் சுஜய் குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் கலைச்செல்வி வாழ்த்துரை வழங்கினார். திருச்சி மண்டல ஜூனியர் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளரும் தஞ்சாவூர் மாவட்ட அமைப்பாளருமான பிச்சைமணி பள்ளியில் ஜூனியர் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் பல் அறுவை சிகிச்சை நிபுணர் அபிராமி உடல் நலம், மனநலம், பல் பாதுகாப்பு பற்றியும் யோகா செய்வதன் பலன்கள் குறித்தும் விளக்கி பேசினார். ரெட் கிராஸ் மாவட்ட கிளையின் நிர்வாக குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரெட் கிராஸ் வரலாறு, ஜூனியர் ரெட் கிராஸ் வரலாறு கொள்கைகளையும் பற்றி எடுத்துரைத்தார். மது போதை தடுப்பு சிறப்பு ஆலோசகர் கேத்ரினாள் மேரி மது போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் விமல்ராஜ் திட்டத்தின் சிறப்பு பற்றி எடுத்துரைத்தார். இந்தியன் ரெட் கிராஸ் சிறப்பு பயிற்றுனர் சுரேஷ் முதலுதவி பற்றி பயிற்சி அளித்தார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் அமர்நாத் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிறைவாக இணை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.