தஞ்சாவூர், ஆகஸ்ட் 28 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 1255 பள்ளிகளில் பயிலும் 61 ஆயிரத்து 20 மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பயன்பெறுகின்றனர் என அமைச்சர் கோவி செழியன் பேசினார். தமிழகம் முழுவதும் நகர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் தொடக்கப் பள்ளியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்வில் கல்யாணசுந்தரம் எம்பி முன்னாள் எம்பி ராமலிங்கம், கும்பகோணம் உதவி கலெக்டர் ஹிருத்யா எஸ். விஜயன், உதவி கலெக்டர் (பயிற்சி) கார்த்திக் ராஜா ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க. ஸ்டாலின் மற்றும் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.
பின்னர் அமைச்சர் கோவி. செழியன் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 2023-24 ம் ஆண்டு அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும், கிராமப்புறத்தில் 1018 பள்ளி களில் பயிலும் 43,566 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பயன் அடைந்து வருகின்றனர். நகர் புற பேரூராட்சிகளில் 69 பள்ளிகளில் பயிலும் 3590 மாணவர் கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயனை அடைந்து வருகின்றனர். இரண்டாம் கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு கிராமப்புறங்களில் உள்ள 141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10,350 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.
தற்போது 3-ம் கட்டமாக நகர்ப்புற பேரூராட்சி பகுதிகளில் உள்ள 27 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3514 மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 1255 பள்ளிகளில் பயிலும் 61 ஆயிரத்தி 20 மாணவ மாணவிகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் பயன் பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணை இயக்குனர் அருண்மொழி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பொன்னியின் செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



