தஞ்சாவூர், ஜூன் 20 –
தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னிலையில் குப்பைகள் எவ்வளவு உள்ளது என்பது குறித்து அண்ணா பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப குழுவினர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் 28 ஏக்கர் பரப்பில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கிற்கு தான் கொண்டு செல்லப்படும். இங்கு சேரும் குப்பைகளை தரம் பிரிக்க கடந்த 2018 ஆண்டு பயோ மைனிக் முறையில் 2.30 லட்சம் கன மீட்டர் அளவுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இதற்காக ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் 40,115 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி 73,253 கன மீட்டர் குப்பையை அகற்றி உள்ளது. அதன் பின் புதிய நிறுவனத்திற்கு 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1.56 லட்சம் கன மீட்டர் ரூபாய் 9.57 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் புதிதாக ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் வெறும் 5000 கன மீட்டர் குப்பையை மட்டுமே அகற்றி விட்டு ரூபாய் 9. 57 கோடி பில் தொகையை எடுத்துக் கொண்டுள்ளது. அதற்கு 8,328 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளனர்.
இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் தஞ்சையை சேர்ந்த சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து குப்பை கிடங்கு மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆவணங்கள் ஆய்வு செய்து தேவையான ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
மேலும் கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர், ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள உதவி பொறியாளர், ஒப்பந்தக்காரர் ஆகிய 4 பேரும் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தஞ்சாவூரில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பர்ண்டு அன்பரசன் தலைமையிலான போலீஸார் முன்னிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப குழுவினர் காலை முதல் மாலை வரை குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் இருப்பு குறித்து ரோவர் உள்ளிட்ட நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்தனர். தொடர்ந்து, இந்த அளவிடும் பணி நடைபெற உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.



