தஞ்சாவூர், ஏப்ரல் 27 –
தஞ்சாவூர் பெரிய கோவில் தேரோட்டம் இன்று திங்கள் கிழமை நடக்கிறது. 14 இடங்களில் தேர் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவில் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழா 15 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடக்க விழா நாட்களில் பல்லக்கிலும் சிம்மம், மேஷம், வெள்ளி, மயில், சந்திரபிரபை , முத்து பல்லக்கு, வெள்ளியானை உள்பட பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்தது.
மேலும் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் பிரதான நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடக்கிறது. இதையொட்டி தேரில் கடந்த 15ம் தேதி பந்தல் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தேருக்கு வார்னிஷ், வர்ணம் பூசி அலங்கரிக்கும் பணி நடைபெற்றது. இதன் மூலம் 19 அடி உயரம் கொண்ட தேர் அலங்காரத்தின் மூலம் மொத்தமாக 50 அடி உயரமாக எட்டி உள்ளது. சாதாரணமாக 40 டன் எடை கொண்ட இந்த தேர் அலங்காரத்துக்கு பிறகு 43 டன்னாக உயர்ந்துள்ளது.
பெரிய கோயிலில் நாளை காலை 5:00 மணிக்கு தியாகராஜர், ஸ்கந்தர், கமலாம்பாள் புறப்பாடும் முத்து மணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்படும் நடைபெற உள்ளது. தேரில் தியாகராஜர் கமலாம்பாள் எழுந்தருளிய பின்னர் காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணி க்குள் திருதேர் வடம் பிடிக்கப்பட உள்ளது.
பக்தர்கள் வசதிக்காகவும் தேரில் வரும் சுவாமிக்கு தேங்காய் பழம், பழம் படைப்பதற்காகவும் மேல வீதியில் சந்து மாரியம்மன் கோயில், கொங்கனேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், வடக்கு வீதி பிள்ளையார் கோவில், ரத்னபுரீஸ்வரர் கோயில், குருகுல சஞ்சீவி கோவில், கீழவீதி யில் கொடிமரத்து மூலை, விட்டோபா கோவில், மணி கர்ணீஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், கனரா வங்கி பிள்ளையார் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், காளியம்மன் கோவில் ஆகிய 14 இடங்களில் தேர் நின்று செல்லும்.
மேல வீதியில் உள்ள தேரடியில் இருந்து புறப்படும் தேர் மேல விதி, வடக்கு வீதி, கீழவீதி, தெற்கு வீதி வழியாக நிலையை சென்று சேரும் மாலையில் தேர் மண்டபத்தில் இருந்து தியாகராஜர், கமலாம்பாள் புறப்பட்டு கோவிலில் சென்றடையும் நிகழ்ச்சி நடைபெறும். இதனிடையே தேரோடும் பாதைகளான மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் சாலைகள் பக்தர்களுக்கு ஆன அடிப்படை வசதிகள், சுகாதார வசதி உள்ளிட்ட முன்னேற்பாடு குறித்து மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஆய்வு செய்தார்.



