கிருஷ்ணகிரி, செப்.18.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசில் காலியாக உள்ள 4,724 செவிலியர் பணியிடங்களை மாவட்ட சுகாதாரச் சங்கம் (DHS) மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமிப்பதால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், தகுதியான செவிலியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு பாதிக்கப்படலாம் என்றும் சங்கத்தினர் தெரிவித்தனர். எனவே, MRB மூலம் முறையான தேர்வு நடத்தி தகுதியான செவிலியர்களை நிரந்தர தன்மையுடைய பணிகளில் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்ட தலைவர் அ. பிரபு தலைமை தாங்கினார். செவிலியர்கள் கவிதா, சதிஷ் மற்றும் சிந்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.



