நாகர்கோவில், ஜூலை 3 –
குமரி மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து பல இனப் பறவைகள் உணவு தேடியும், இனப்பெருக்கத்திற்கும் வருவது வழக்கம். இதனால் தேரூர், மாணிக்கம் புத்தேரி, சுசீந்திரம், வேம்பனூர் உள்ளிட்ட பல குளங்கள் பறவைகள் சரணாலயமாக வனத்துறை அறிவித்து பாதுகாத்து வருகிறது. இந்தக் குளங்களுக்கு கூட்டம் கூட்டமாக பறவைகள் வந்து கூடு கட்டி, குஞ்சு பொரித்து செல்வதை பார்க்க முடிகிறது.
நாகர்கோவில் மையப் பகுதியில் உள்ள சுசீந்திரம் பெரிய குளத்தில் பறவைகள் அமரும் வகையில் குளத்து நடுவே பெரிய திட்டுடன் மரங்கள் வளர்ந்து இருப்பது சிறப்பாக உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து அமர்ந்து இந்த பறவைகள் மற்றும் இயற்கையை ரசித்து பார்க்கும் வகையில் சுசீந்திரம் பதினெட்டாம் படி பகுதியில் கண்காணிப்பு கோபுரம் மற்றும் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அலங்கார நடைபாதையும் போடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து சுற்றுலா வரும் மக்கள் இந்த பகுதியில் அமர்ந்து இளைப்பாறி விட்டு அழகை ரசித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா இன்று சுசீந்திரம் பெரிய குளத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஏற்கனவே அங்கு காட்சி கோபுரம் அமைத்தது இருப்பது போல் மற்றொரு காட்சி கோபுரம் அமைக்கலாமா? என எனவும், அலங்கார நடைபாதை நீட்டிப்பு செய்ய வழிவகை உள்ளதா? எனவும் அவர் ஆய்வு செய்தார்.
இதனைத் தவிர சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைகள் அனைத்தும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்று சுசீந்திரம் பெரிய குளத்தின் மறுப்பகுதியில் உள்ள கரியமாணிக்கபுரத்திலும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



