குளச்சல், ஆகஸ்ட் 1 –
கேரளா மாநிலத்தை சார்ந்த இரண்டு அருட் சகோதரிகள் ப்ரீத்தி மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் ஆகியோர்கள் சட்டீஸ்கர் மாநிலத்தில் சமூகப் பணியை செய்து வந்தனர். சம்பவத்தன்று ஜூலை மாதம் 25-ம் தேதி சட்டீஸ்கர் மாநிலம் நாராயண புரத்தைச் சார்ந்த மூன்று பெண்களுக்கு ஆக்ராவில் வேலை வாய்ப்பு வாங்கி கொடுப்பதற்காக துர்க் ரயில் நிலையத்திற்கு வந்தபோது பஜ்ரங்கத்தால் என்ற அமைப்பை சார்ந்தவர்களால் அவர்கள் தாக்கப்பட்டு துர்க் ரயில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்கள்.
இரண்டு அருட் சகோதரி மீதும் சட்டீஸ்கார் மத சுதந்திரம் சட்டத்தின்படி இவர்கள் கட்டாய மதமாற்றம் மூன்று பெண்களுக்கு செய்ததாகவும், அவர்களை ஆள் கடத்தல் செய்வதாக ஆள் கடத்தல் பாதுகாப்புச் சட்டத்தின் படியும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு அருட் சகோதரிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட மூன்று நாராயணபுரம் பெண்களும் தாங்கள் மதமாற்றம் செய்யப்படவில்லை என்றும், கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும் எங்கள் வாழ்வாதார வேலை வாய்ப்புக்காக அருட் சகோதரி உதவிய நாடி சென்றதாகவும் கூறியுள்ளார்கள்.
ஆனால் ரயில் காவல்துறையினர் மூன்று பெண்களின் வாக்குமூலத்தையோ அருட் சகோதரிகளின் வாக்குமூலத்தையோ பதிவு செய்யாமல் பஜ்ஜிரங்கதள் உறுப்பினர் ஜோதி சர்மா என்பவரின் வாக்குமூலத்தைப் பெற்று குற்றமே செய்யாத அருட் சகோதரி மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
இதை கண்டித்தும் உண்மைக்குப் புறம்பாக குற்றப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கக் கூடிய அருள் சகோதரிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி கடல் மக்களின் கண்டனக் குரல் போராட்டம் குளச்சல் கடல் பகுதியில் நேற்று நடத்தப்பட்டது. தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமை வகித்தார். குளச்சல் விசைப்படகு உரிமையாளர் – தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரக்சன், துணை தலைவர் கமலன், செயலர் ஆரோக்கியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.