நாகர்கோவில், ஜூன் 22 –
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அரசு விதிமுறைகளை மீறி கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. இதையடுத்து தோவாளை மற்றும் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட சோதனை சாவடிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது: மாவட்டத்திற்குட்பட்ட சோதனைச் சாவடிகளில் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விதிமுறைகளைப் பின்பற்றிச் செல்கின்றனவா என்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக தோவாளை வட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடி, அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி நெடுஞ்சலையில் அமைந்துள்ள காணிமடம் சோதனை சாவடி மற்றும் அஞ்சுகிராமம் சோதனை சாவடி உள்ளிட்டவைகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வாகனங்கள் வருகை குறித்த பதிவேடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கனரக வாகனங்களில் கனிம வளங்கள் சரியான அளவில், நிர்ணயிக்கப்பட்ட எடையில் ஏற்றப்பட்டுள்ளதா எனவும், கனிம வளங்களை ஏற்றி வரும் கனரக வாகனங்களை நிறுத்தி, அவற்றுக்கான முறையான அரசு உரிமங்கள் மற்றும் ரசீதுகள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்து அனுப்ப காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார்.
மேலும் மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி வரும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். நடைபெற்ற ஆய்வில் வட்டாட்சியர்கள் சிவகலா (தோவாளை), ஆறுமுகம் (அகஸ்தீஸ்வரம்) மற்றும் காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



