கன்னியாகுமரி, மே 19 –
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ஏராளமான ரிசார்ட்டுகள் அமைந்துள்ளன. இங்கு வரும் வெளிநாட்டு, வெளி மாநில சுற்றுலா பயணிகள் இந்த ரிசார்ட்டுகளில் தான் தங்கி இருப்பது வழக்கம். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்களும் இங்கு தங்குகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஒரு ரிசார்ட் பின்புறம் உள்ள கடல் பகுதியில் வாலிபர் ஒருவரின் சடலம் மிதந்தது. அந்த வழியாக சென்றவர்கள் கண்டு, இது குறித்து கன்னியாகுமரி போலீசுக்கு என்று தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும் என தெரிகிறது. இறந்து 2 அல்லது 3 நாட்கள் ஆனால் உடலில் தோல் உரிந்த நிலையில் காணப்பட்டது. இறந்தவர் யார்? என்பது இதுவரை தெரியவில்லை.
இது தொடர்பாக கன்னியாகுமரி கிராம நிர்வாக அலுவலர் சீதா அளித்த புகாரின் பேரில் கடலோர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த கிடந்தவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னரே இது பற்றி கூற முடியும் என போலீசார் தெரிவித்தனர்.


