ஈரோடு, 18.08.2026
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மகளிர் நலன் மற்றும் சமூக சேவையில் சிறப்பாகப் பணியாற்றிய சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது ஈரோடு அட்சயம் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற விழாவில், அறக்கட்டளைக்கு விருதுடன் ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட விருது மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை அட்சயம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் பெ.நவீன்குமார், குழுவினர்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமியிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். சமூக நலன் மற்றும் மகளிர் நலனில் அறக்கட்டளை மேற்கொண்டுவரும் பணிகளுக்கு கிடைத்த இந்த அங்கீகாரம், அமைப்பின் சேவைக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
மகளிர் நலன், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து பணியாற்றி வரும் அட்சயம் அறக்கட்டளையின் சேவையைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்றதையடுத்து அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் குழுவினருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.



