தஞ்சாவூர், மே 9 –
ஆட்சி அமைக்க அழைக்க மறுப்பதாக கூறி கவர்னரை கண்டித்து தஞ்சாவூர் காங்கிரஸ் மற்றும் தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநகர மாவட்ட தலைவர் பிஜி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க மறுக்கும் ஆளுநரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. உடனடியாக த.வெ.கவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், சேவா தளம் மாநிலத் துணைத் தலைவர் திருஞானம், மாவட்ட துணைத் தலைவர் நாகராஜ், மாவட்ட செயலாளர் சுரேந்தர், மாநகர செயலாளர் வசந்த், பகுதி செயலாளர் சுரேஷ், பிரவின், பாலாஜி, முத்து மகளிர் அணி அமைப்பாளர் பைரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



