திருவள்ளூர், ஜூலை 21 –
திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். திருவள்ளூர் – ஆவடி சாலை மற்றும் காக்களூர் கிராமத்திற்குள் செல்லும் சாலை பகுதியில் சிவன் கோவில் பின்புறம் குளம் ஒன்று உள்ளது. இந்த குளக்கரையில் பொது மக்களின் வசதிக்காக ரூ. 97 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்பு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் நடை பாதை பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ச.கவிதா உத்தரவின் பேரில் கடந்த ஜூன் மாதம் ஆக்கிரமிப்பு கடை அகற்றப்பட்டது.
அதே நேரத்தில் குளக்கரை அருகே உள்ள மீன் கடையை அகற்ற நோட்டிஸ் கொடுத்தும் அகற்றாததால் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் சரண்யா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன் , ஜானகி முன்னிலையில் ஜேசிபி எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்ற முற்பட்ட போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக ஒன்றிய செயலாளர் ஆர். ஜெயசீலன் அதிகாரிகளிடம் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திமுக ஆட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில் ஒன்றிய செயலாளர் எதிர்ப்பால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் போனது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு கடையை இடித்து அகற்றினர்.



