தஞ்சாவூர், ஆக. 28:
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தங்கள் பெயரில் உள்ள நிலத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் விவசாயி அடையாள எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரேவதி அறிவுறுத்தியுள்ளார்.
வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அடையாள எண் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நேரடி பட்டா வைத்துள்ள விவசாயிகள், அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் பதிவு செய்து விவசாயி அடையாள எண்ணைப் பெற வேண்டும். ஏற்கனவே அடையாள எண் பெற்றுள்ள விவசாயிகள், தங்கள் பெயரில் உள்ள அனைத்து பட்டா நிலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஒரு விவசாயிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டாக்கள் இருந்து, ஒரு பட்டா மட்டுமே அடையாள எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், மீதமுள்ள நிலங்களின் விவரங்களையும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும். இதற்காக அனைத்து பட்டா விவரங்கள், ஆதார் எண் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுடன் அலுவலர்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பயிர்க்கடன், உர விநியோகம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த சேவைகள், விவசாயி அடையாள எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலங்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாயி அடையாள எண் பெற்றவர்கள் ‘நம்ம வயல்’ செயலி மூலம் தங்களது சாகுபடி விவரங்களை மின்னணு பயிர் கணக்கெடுப்பில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் விவசாயிகள் தங்களது செல்போன் வாயிலாகவே பயிர் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியும்.
எனவே, விவசாயிகள் அனைவரும் தங்களது நில விவரங்களை விவசாயி அடையாள எண்ணுடன் இணைக்க இ-சேவை மையங்கள், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.



