புதுக்கடை, ஜூலை 22 –
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு அக்கர விளை பகுதியை சேர்ந்தவர் சாபு (45). இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (40) அப்பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் ஆயாவாக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஸ்ரீகாந்த் (22) டிரைவர் வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடந்து வந்தது.
இதனால் தற்போது ஐஸ்வர்யா அவரது அம்மா வீட்டில் தங்கி இருந்துள்ளார். இதனால் மன வருத்தத்தில் இருந்த ஸ்ரீகாந்த் இரவு தூங்க சென்றவர் மறுநாள் காலை நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதையடுத்து தாயார் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் மகன் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக ஜெயஸ்ரீ புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வாலிபர் ஸ்ரீகாந்த் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பித்து மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.