மார்த்தாண்டம், ஜூன் 22 –
மார்த்தாண்டம் அடுத்த பாகோடு, பேரை என்ற பகுதியை சேர்ந்தவர் சனில். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரஜிதா (33). கடந்த 19ம் தேதி காலை 11 மணியளவில் ரஜிதா வீட்டிலிருந்து ஒரு ஜோடி தங்க கொலுசு, 2 தங்க செயின்கள், ஒரு நெக்லஸ் உட்பட 6 பவுன் தங்க நகைகளுடன் பஸ்ஸில் மார்த்தாண்டத்தில் இருந்து திருவரம்பு என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். நகையுடன் ரூ 5 ஆயிரம் பணமும் அவரிடம் இருந்துள்ளது.
வெளிநாட்டில் உள்ள தனது கணவர் இந்த நகைகளை அவரிடம் வேலை பார்த்து வரும் நண்பர் கிளாஸ்டின் என்பவர் ஊருக்கு வந்திருந்ததால், அவரை சந்தித்து கொடுக்க நகைகளை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. திருவரம்பு தனியார் பள்ளி பஸ் நிறுத்தத்தில் இறங்கி பார்த்தபோது அவரது பேக் திறந்திருந்தது. உள்ளே இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜிதா இது குறித்து திருவட்டாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இவர் பயணம் செய்த பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பேகை திறந்து பணம் நகைகளை எடுத்து உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து திருவட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


