திருப்பூர், அக். 01 –
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்தாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துத்துறைகளின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தொலைநோக்குத் திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் நிலைகள் குறித்தும் அனைத்துத்துறைகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டங்கள்.
தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றைய தினம், திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை, மகளிர் திட்டம், சுகாதாரம், பள்ளிக்கல்வித்துறை, பத்திரப்பதிவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பேரூராட்சிகள் துறை, வேளாண் பொறியியல் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை, இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தாட்கோ, மதிய உணவுத்திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்துறைகளில் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்தும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்தும், திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொது மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, சாலைவசதி, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக், மாவட்ட வன அலுவலர் ராஜேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் க. கார்த்திகேயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திருமதி க. சங்கமித்திரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திருமதி புஸ்பாதேவி மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



