நாகர்கோவில், நவ. 10 –
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்: குமரி மாவட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி வீதத்தை 100% கொண்டு வரும் வகையிலும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களை 12 ஆம் வகுப்பிற்கு பின் சிறந்த முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்த்து கல்வி பெற்றிட செய்யும் வகையிலும் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டு, பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. மாணவர்களிடம் 100% தேர்ச்சிக்கு இடையூறாக மாணவர்களின் ஒழுங்கற்ற வருகை காணப்படுவதால், மாணவர்களை ஒழுங்காக பள்ளிக்கு வருகை தர அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் படிப்பினை மட்டுமே முழுமுதற்பணியாக கொண்டு செயல்பட வேண்டுமெனவும், தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கிற முக்கியமான காலக்கட்டம் 12ம் வகுப்பு. எனவே உயர் மதிப்பெண்களை பெற்றுக் கொள்வதை இலட்சியமாக கொண்டு தொடர்ந்து வருகின்ற 3 மாதகால அளவும் கடின உழைப்புடன், ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பெற்று நன்றாக படிக்க வேண்டும் என மாணவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
முறையாக7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சிறந்த முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக பெற்றுக் கொள்ள வேண்டிய கட்ஆப் மதிப்பெண் எவ்வளவு என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக பெண் குழந்தைகள் அனைவரும் உயர்கல்வி கற்று தங்கள் குடும்பத்தை வளம் நிறைந்ததாக கொண்டுவர பெண்களின் கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். என கூறினார். நடைபெற்ற ஆய்வில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



