குளச்சல், ஜூலை 11 –
குளச்சல் அருகே மேல குறும்பனையை சேர்ந்தவர் சகாய சர்ச்சில் (36). இவருக்கு சொந்தமான ஃபைபர் வள்ளத்தில் நேற்று முன்தினம் வழக்கம் போல் அதே பகுதியை சேர்ந்த டார்வின் (50), ஜார்ஜ் (60) உள்ளிட்ட 6 தொழிலாளர்கள் மீன்பிடிக்க சென்றனர். வள்ளம் குறும்பனையில் இருந்து கடலில் சுமார் 150 மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி வள்ளம் தூக்கி வீசப்பட்டது. இதில் வள்ளத்தில் இருந்த அனைவரும் கடலில் விழுந்தனர். இந்த சம்பவத்தில் டார்வின், ஜார்ஜ் இருவரும் பலத்த காயமடைந்தனர். கடலில் தத்தளித்த 6 பேரையும் மற்றொரு வள்ளத்தில் வந்த மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர். படுகாயம் அடைந்த இரண்டு பேரும் கருங்கல் மற்றும் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.