தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக 534 தேநீர் மற்றும் சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட வணிக மையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு – 86 கடைகளில் நியூஸ் பேப்பர் மற்றும் ப்ளாஸ்டிக் பயன்படுத்தியதாலும், 56 கடைகளுக்கு உரிமம் இல்லாததினாலும் வழக்கு பதிவு – மாவட்ட நியமன அலுவலர் அறிவிப்பு.
சுகாதாரத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் த.சுப்ரியா சாகு, உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வேணா, ஆகியோரது வழிகாட்டுதலிலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், அவர்களது ஆலோசனையின் பேரிலும் உணவு பாதுகாப்புத் துறை மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது.
அதன் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சித் தலைவரது உத்திரவின் பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேநீர் கடைகள் மற்றும் சிற்றுண்டி உணவகங்கள் உள்ளிட்ட உணவு வணிகக் கடைகள் ஆகியவற்றில் உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும், நியூஸ் பேப்பர் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தில் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் பயன்படுத்தப்படுகின்றதா என்று மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் அவர்களது தலைமையில், அத்துறையின் அலுவலர்கள் கடந்த நான்கு நாட்களாக தூத்துக்குடி மாநகரம், புதுக்கோட்டை, காயல்பட்டிணம், திருச்செந்தூர், சாத்தான்குளம், உடன்குடி, ஆழ்வார்திருநகரி, கயத்தார், கழுகுமலை மற்றும் எப்போதும்வென்றான் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
ஆய்வு செய்யப்பட்ட 534 தேநீர் மற்றும் சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட உணவு வணிகக் கடைகளில், 65 கடைகளில் உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும், நியூஸ் பேப்பர் பயன்படுத்தியதும், 16 கடைகளில் மேற்கூறிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் பயன்படுத்தியதும், 5 கடைகளில் பேப்பர் & ப்ளாஸ்டிக் ஆகிய இரண்டும் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 56 கடைகள் உணவு பாதுகாப்பு உரிமம்/பதிவுச் சான்றிதழின்றி உணவு வணிகம் புரிவதும் கண்டறியப்பட்டது. ஏற்கனவே, பொது அறிவிப்பு இரண்டு முறை பிரசுரிக்கப்பட்டுள்ளதால், 136 கடைகளுக்கு எதிராக மாவட்ட நியமன அலுவலரிடத்தில் அபராதம் விதிக்க கோரி, சமரசத் தீர்வு வழக்காக பதிவு செய்யவும், மீதி 6 வழக்குகள் மாவட்ட வருவாய் அலுவலர் நீதிமன்றத்திலும் பதிவு செய்யப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. நியூஸ் பேப்பர் பயன்படுத்திய வணிகர்களுக்கு மேற்கூறிய சட்டத்தின் படி ரூ.1000/-ற்கு குறையாமலும், அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் பயன்படுத்திய வணிகர்களுக்கு ரூ.2000/-ற்கு குறையாமலும், உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழின்றி உணவு வணிகம் புரிந்தவர்களுக்கு ரூ.5000/-ம் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. உணவு பாதுகாப்பு உரிமத்திற்குத் தகுதி பெற்று, அதனைப் பெறாமல் வணிகம் புரிந்தவர்களுக்கு ரூ.10,00,000/- வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்படுகின்றது ,மேலும் காயல்பட்டிணம், ஆழ்வார்திருநகரி மற்றும் ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் தலா ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை/நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை கண்டறியப்பட்டு, அவை மூடப்பட்டது. நன்னடத்தைக் கட்டுப்பாட்டு ஆவணம் ஏற்படுத்திய பின்னர், நியமன அலுவலரால் ரூ.25,000/-ம் அபராதம் விதித்து உத்திரவிட்ட பின்னரே அக்கடைகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.உணவு வணிகர்கள் உணவுப் பண்டங்களை ஈக்கள் மொய்க்காதவாறும், தூசி படியாதவாறும் மூடி வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்றும், உணவுப் பொருட்களைப் பரிமாறவோ அல்லது பொட்டலமிடவோ அச்சிட்ட காகிதங்களையும், அனுமதியற்ற ப்ளாஸ்டிக்குகளையும் பயன்படுத்தக்கூடாது என்றும், தடைசெய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாதுஎன்றும் எச்சரிக்கப்படுகின்றது. மீறினால், “அபராதம் மற்றும் கடையின் இயக்கம் நிறுத்தல்” உள்ளிட்ட கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது. மேலும், உணவு பாதுகாப்பு உரிமத்தினை https://foscos.fssai.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பித்துப் பெற்ற பின்னரே உணவு வணிகம் புரிய வேண்டும் என்றும், மீறினால், கடையின் இயக்கம் நிறுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது.
மேலும், நுகர்வோர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட நெறிமுறைகளை வணிகர்கள் பின்பற்ற தவறினால், மேற்கூறிய சட்டத்தின் கீழ் பறிமுதல், வியாபாரம் நிறுத்தம், நியமன அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதினால், சட்டத்திற்குட்பட்டு வணிகம் செய்து, வணிகத்தினை பாதுகாத்துக்கொள்ளுமாறு உணவு வணிகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்