மார்த்தாண்டம், ஏப்-20
பேச்சிப்பாறை டி.பி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அபிலாஷ் (18). இவர் திருவட்டார் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் படிப்பு படித்து வந்தார். அபிலாஷ் வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை பேச்சிப்பாறை அணையில் குளிக்க சென்றார். பின்னர் நீண்ட நேரமாக அவர் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து அபிலாஷ் வழக்கமாக குளிக்கும் பகுதியில் உறவினர்கள் தேடிச் சென்றனர். அப்போது அபிலாஷ் ஆடைகள் அணையின் கரையில் இருந்தன.
பின்னர் தேடிய போது, அணையில் 3 அடி ஆழ தண்ணீரில் அபிலாஷ் பிணமாக கிடந்தார். இதையடுத்து உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். நேற்று அணை பகுதியில் கடும் இடி மின்னலுடன் மழை பெய்தது. அபிலாஷ் கபடி வீரர். மேலும் நன்றாக நீச்சல் பயிற்சி பெற்றவர். எனவே மின்னல் தாக்கி இறந்திருக்கலாம் என மக்கள் சிந்திக்கின்றனர். இது குறித்து பேச்சிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை பின் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.