தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் கொடி குறிச்சி ஊராட்சி கட்டுப்பாட்டிலுள்ள கடம்பன் குளத்தில் மீன் விரலிகள் இருப்பு செய்தலுக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் மீன் விரலிகளை கடம்பன் குளத்தில் விட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
2024 -2025 ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் மீன் குஞ்சு இருப்பு செய்யும் திட்டம் அறிவிப்பு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்திற்கு 150.50 ஹெக்டேர் (EWSA) இலக்கு நிர்ணயம் செய்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் மீன் உற்பத்தி திறனை அதிகரித்திட ஒரு ஹெக்டேருக்கு 2000 மீன்விரலிகள் இருப்பு செய்திட ஆணை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் கொடிக்குறிச்சி ஊராட்சி கட்டுப்பாட்டிலுள்ள கடம்பன் குளத்தில் மீன் விரலிகள் விடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் சந்திரா, திருநெல்வேலி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் மோகன்ராஜ், தென்காசி மீன்வள ஆய்வாளர் பாலமுருகன், கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர், கொடி குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கொடிக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.