கன்னியாகுமரி ஜன 18
இலட்சுமிபுரம் – சங்கரலிங்கபுரம் ஊர்நலச்சங்கத்தின் சார்பில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்திய பொங்கல் விழா இலட்சுமிபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஓய்வு பெற்ற தெற்கு ரயில்வே தலைமை சிக்னல் மற்றும் டெலிகாம் பொறியாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஊர் நலச்சங்க கௌரவ தலைவர் ஸ்ரீதரன், ஓய்வு பெற்ற முதுநிலை ஆடிட்டர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் எம் எல் ஏ கலந்து கொண்டு இளவட்டக்கல் போட்டியில் வெற்றி பெற்ற ஆண், பெண் இருபாலரையும் பாராட்டி சால்வை அணிவித்து பேசும் போது கூறியதாவது,
இப்பகுதியில் நடைபெறும் 8-வது ஆண்டு பொங்கல் விழாவில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பொங்கல் நிகழ்வாக இருந்தாலும், காலச்சூழல் மாறுவதன் காரணமாக இறைவன் தரும் வரப்பிரசாதமான மழையின் வரவை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.
பொங்கல் விழா என்பது பாரம்பரியம் மிகுந்த சிறப்புக்குரிய விழாவாகும். உழவர்கள் தங்கள் உழைப்பின் மூலம் பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கும் பொருட்களை சூரியனுக்கு படைத்து இறை வழிபாடு செய்யும் அற்புதமான பண்பாட்டுக்குரிய சிறப்பான விழா பொங்கல் விழா. சேர, சோழ, பாண்டிய காலத்திற்கு முன்பாகவே பொங்கல் விழா தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
விளையாட்டின் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க முடியும். என அவர் பேசினார்.
விழாவின் தொடக்கத்தில் செல்வி அனன்யா வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளரும், தொழிலதிபருமான ஜெஸீம், அஞ்சுகிராமம் பேரூராட்சி உறுப்பினர்கள் ராஜபாண்டி, ஜோஸ் திவாகர், இலட்சுமிபுரம்-சங்கரலிங்கபுரம் ஊர் நலச்சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் லக்வின், செயலர் சோமசுந்தர மூர்த்தி, துணைச் செயலாளர் அருணாச்சலம், பொருளாளர் விஜயகுமார், இணைச் செயலாளர் சுடர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.