குலசேகரம், பிப். 15-
குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் ஏற்கனவே தனியார் வன சட்டத்தை அமல்படுத்திய காரணத்தால் சொந்த பூமி இழந்த மக்களாக பலர் உள்ளனர். இங்கு குரங்குகள், கரடிகள், பாம்புகள், மிளா, காட்டு யானைகள் தொல்லைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்போது புலி தொல்லையும் ஏற்பட்டு வருகிறது.
ஏற்கனவே புலி பாதிப்பு மருதம்பாறை,பத்து காணி ,மைலார், மோதிரமலை, திருநந்திக்கரை பகுதி என்று கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னால் வேளிமலை தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் பகுதியிலும் புலி நடமாட்டம் காணப்பட்டது. இதனால் தோட்ட வேலைகளுக்கு தொழிலாளர்கள் செல்வதற்கு அச்சத்தில் உள்ளார்கள்.
எனவே பொதுமக்களையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க வலியுறுத்தி பொன்மனையில் உள்ள வேலிமலை வனச்சரகர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட தோட்ட தொழிலாளர்கள் சங்கம்– சிஐடியு– சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் மரியமிக்கேல் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சங்க தலைவர் பி. நடராஜன் பேசினார். கோரிக்கைகளை விளக்கியும் வாழ்த்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க குமரி மாவட்டம் சார்பில் முன்னாள் தலைவர் சைமன் சைலஸ் பேசினார். கடந்த கால காட்டு மிருக தொல்லையால் மக்களின் பாதிப்பு மற்றும் உடனடியாக தொழிலாளர்களை பாதுகாக்கவும் விவசாய மக்களை பாதுகாக்கவும் வலியுறுத்தி சங்க பொதுச்செயலாளர் எம். வல்ச குமார் பேசி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.