முதுகுளத்தூர். ஜன22. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா ஏனாதி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் விவசாயத்தையே நம்பி உள்ளனர். வானம் பார்த்த பூமியான ஏனாதி வருவாய் கிராமத்தில் போதுமான மழை பெய்யவில்லை. பொதி பருவத்தில் மழை பெய்யாத நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் திரண்டு முதுகுளத்துர் தாலுகா அலுவலகத்தில் மனு செய்தனர். முதுகுளத்தூர் துணை தாசில்தார் ராஜ்குமார் மனுவை பெற்றுக்கொண்டு கலெக்டருக்கு அனுப்பி வைப்பதாக ஏனாதி கிராமத்தினரிடம் தெரிவித்தார். வேளாண்மை அதிகாரிகளிடமும், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் ஏனாதி கிராமத்தினர் மனு கொடுத்துள்ளனர்.



