ராமநாதபுரம், ஜன. 25-
இராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இரமநாதபுரம் நகரில் செயல்படுத்தப்பட வேண்டிய வளர்ச்சி திட்டம் குறித்த கோரிக்கை மனுவை ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் காங்கிரஸ் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் அளித்தார்.
அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் நகராட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள ரோட்டில் வாகன போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருவதால் மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் செல்வதற்கு மிகவும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் பேராபத்தும் உள்ளது. இந்த ரோட்டில் தனியார் மருத்துவமனை, வணிக வளாகங்கள், திருமணம் மண்டபம், நிலைப்பள்ளி, மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு, நர்சிங் கல்லூரி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூடம் போன்றவை அமைந்துள்ளன. இந்த ரோட்டை பயன்படுத்தும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலால் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் முகூர்த்த தினங்களில் இந்த சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளது.
எனவே ராமநாதபுரம் மக்களின் நலன் கருதி ரோமன் சர்ச் சாலை தெரு முதல் வழிவிடும் முருகன் கோயில் வழியாக புதிய பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரோட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். இந்த மனு குறித்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஒரு பொருளாக வாசித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு பொதுக்கணக்கு குழு தலைவர் பரிந்துரை செய்துள்ளார்.



