அரியலூர், நவ;27
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், 75-வது இந்திய அரசமைப்பு தினத்தினை முன்னிட்டு 26.11.2024 நேற்று காலை 11.00 மணிக்கு இந்திய அரசமைப்பு முகப்புரையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச்சமுதாயமும், சமயச்சார்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படிநிலை, வாய்ப்பு நலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும் தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும், உள்ளார்ந்த உறுதியுடையராய் நம்முடைய அரசமைப்புப் பேரவையில் 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று ஈங்கிதனால் இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி நமக்கு நாமே வழங்கிக்கொள்கிறோம் என முகப்புரையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வாசிக்க, அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்