நாகர்கோவில் – மே – 29,
கன்னியாகுமரி மாவட்டம், திரிவேணி சங்கமத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் குமரி கலை விழாவினை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி தலைமையில் நேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பேசுகையில்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு, சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் ஐந்து நாள் குமரி கலை விழா நிகழ்ச்சி கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த விழா குமரி கலை விழா என்ற பெயரில் நடக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஐந்து நாட்கள் இந்த கலை நிகழ்ச்சியை பார்வையிட வாய்ப்பு கிடைத்துள்ளது. சுற்றுலாவை மேம்படுத்துவது சுற்றுலா குறித்து அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
கன்னியாகுமரி ஒரு புண்ணிய பூமி ஆகும். முக்கடலும் சங்கமிக்கும் இடமாகும். அய்யன் திருவள்ளுவர் சிலையை கலைஞர் உருவாக்கியதாகும். விவேகானந்தர் மண்டபம், காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம் ஆகியவை நாட்டுக்காக தியாகம் செய்த தலைவர்களின் மண்டபங்களாகும். வருடத்திற்கு ஒன்றரை கோடி பேரை ஈர்க்கும் கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுலாப்பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அய்யன் திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் பாறையினை இணைத்து சுற்றுலாப் பயணிகள் 133 அடி உயரத்தில் உள்ள அய்யன் திருவள்ளுவரை கண்டு களித்திட ரூ.37 கோடி மதிப்பில் வரலாற்று சிறப்பு மிக்க கண்ணாடி இழை தரைத்தளம் பாலம் அமைத்து, கடந்த 30.12.2024 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
கண்ணாடி இழை தரைத்தள பாலம் திறந்து வைத்ததைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து அய்யன் திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை தரைத்தளபாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு பெருமிதம் அடைகின்றனர். மேலும் விடுமுறை நாட்கள் என்பதால் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை புரிக்கின்றனர்.
நமது மாவட்டத்தில் கடற்கரை கிராமங்கள், மலைகள், நீர்நிலைகள், அணைகள் ஆகியவை வரலாற்று சிறப்புமிக்கதாகும். நமது மாவட்டத்தில் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும். சுற்றுலா தளங்களை பாதுகாப்பது நம்முடைய கடமை ஆகும். சுற்றுலா தளங்களாக முட்டம், திற்பரப்பு, சித்தார். மாத்தூர் தொட்டி பாலம் போன்ற சுற்றுலா பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
குமரி கலை விழா நிகழ்ச்சி நடை பெறுவதன்மூலம் பாராம்பரிய கலைகளுக்கும். நாட்டுப்புற கலைஞர்களுக்கும் வாய்ப்பளிக்க முடியும். பல்வேறு நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை கண்டுகளிப்பதற்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். பொதுமக்கள் அனைவரும் இந்த கலை விழாவிற்கு திரளாக வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர்கள், இசை கலைஞர்கள், பரதநாட்டிய குழுவினர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், மேளதாள குழுவினர் உள்ளிட்டோர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் பாடல்கள், ஆடல் பாடலுடன் குமரி கலைவிழா முதல் நாள் சிறப்பாக நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்திய கலைஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்கள்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர்
என்.சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன். துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல். நகர்மன்ற உறுப்பினர் ஆட்லின், உதவி சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், தாமரை பாரதி, பாபு, பூதலிங்கம், துறை அலுவலர்கள், கலைஞர்கள். சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.