அருமனை, பிப்-1
அருமனை அருகே பத்துகாணி பகுதியை சேர்ந்த ஒரு 50 வயதான ஆட்டோ டிரைவருக்கு திருமணம் ஆகி 40 வயதில் மனைவி, மகன் உள்ளனர். மனைவி அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆட்டோ டிரைவரின் மனைவிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த டிரைவர் மனைவியிடம் இது குறித்து கேட்டபோது, அன்று முதல் கணவன் மனைவியிடைய தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று ஆட்டோ டிரைவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது தனது மனைவியுடன் சம்பந்தப்பட்ட வாலிபரும் வந்துள்ளார். அப்போது இந்த தொடர்பு குறித்து அந்த வாலிபரிடம் கணவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த வாளால் டிரைவரை வெட்ட முயன்றார்.
இதில் ஆட்டோ டிரைவர் சுதாரித்துக் கொண்டு விலகினார். இதனால் வெட்டு அருகில் நின்ற மரத்தில் விழுந்தது. இதை எடுத்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஆட்டோ டிரைவர் ஆறுகாணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில் டிரைவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில் ஆட்டோ டிரைவரின் மனைவி மற்றும் வாளால் வெட்ட முயன்ற நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.