தக்கலை, டிச. 12 –
குமரி மாவட்டம் கேரளா மாநிலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, தலைநகரமாக விளங்கியது பத்மநாபபுரம் ஆகும். அப்போது நாட்டில் விவசாயம் செழிப்பதற்காக தக்கலையில் இருந்து பொதுப்பணித்துறையினரும், குற்றங்கள் குறைய வேண்டி போலீசாரும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு காவடி ஏந்தி சென்று நேர்த்தி கடன் செலுத்துவது பாரம்பரிய நிகழ்ச்சி ஆகும்.
பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது. காலையில் தக்கலை போலீஸ் நிலையத்தில் இருந்து காவடிக்கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இரண்டு புஷ்பகாவடியும், யானை மீது பால் குடமும் கொண்டு செல்லப்பட்டது. போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்வில் பத்மநாபபுரம் நீதிமன்ற நீதிபதிகள் ராமச்சந்திரன், மாரியப்பன், சுந்தரி, கார்த்திக், துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போலீஸ் நிலையத்தில் காவடிக்கட்டும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் யானை மீது பால்குட பவனியுடன் போலீசார் காவடி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்த பாதயாத்திரையாக குமாரகோவில் முருகன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர் இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அதேபோன்று மழை பொழிய வேண்டியும், விவசாய செழிக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் தக்கலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து வேளிமலை முருகனுக்கு நாதஸ்வரம் மற்றும் மேளதாளங்கள் முழங்க புஷ்ப காவடி ஏந்தி சென்று வழிபாடு நடத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைமை பொறியாளர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் அருள்சன் பிரைட், உதவி பொறியாளர்கள் கதிரவன், வினிஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் தென்கரை, வழிக்கலம்பாடு, குலசேகரம், திருவட்டார், தக்கலை, பாலப்பள்ளி உட்பட்ட பல்வேறு ஊர்களில் இன்னும் பொதுமக்கள் சார்பிலும் காவடி ஊர்வலம் குமாரகோவிலுக்கு சென்றது.



