மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் நவம்பர் 2ல் துவங்கி நவம்பர் 8 ல் நிறைவடைகிறது. இக்கோயிலில் நவ. 2 காலையில் உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் வள்ளி, ஆறுமுகம் கொண்ட சண்முகருக்கு காப்பு கட்டப்படும். அதனைத் தொடர்ந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான நவ. 6 ல் வேல் வாங்குதல், நவ. 7ல் சூரசம்ஹாரம், நவ. 8 காலையில் தேரோட்டம், மாலையில் பாவாடை தரிசனம் நடைபெறவுள்ளது. அன்று மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கக் கவசம், மற்ற மூலவர்களான கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளகனிவாய் பெருமாளுக்கு வெள்ளி கவசங்கள் சாத்துப்படி ஆகும். சஷ்டி விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.



